சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை உரிய காலத்துக்குள் அன்றைய அரசு செயல்படுத்தவில்லை என தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதனல் அரசுக்கு ரூ.68 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-18ஆம் ஆண்டு போட்டித் தேர்வுகளை எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, ஏறக்குறைய 60 ஆயிரம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
எனினும், அவற்றுள் ஏறத்தாழ எட்டாயிரம் மடிக்கணினிகள் மட்டுமே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தணிக்கைத்துறைத் தலைவர் தரப்பு தெரிவிக்கிறது.
மீதமுள்ள மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறது தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை.
இதனால், அந்த மடிக்கணினிகளின் மின்கலங்களுக்கான உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டதாகவும் அதன் காரணமாக 68.71 கோடி ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் விவரிக்கப்பட்டு உள்ளது.

