சென்னை: தமிழக காவல்துறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.74 கோடி தொகை பயன்படுத்தப்படவில்லை என மத்திய தணிக்கைத்துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்துக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, தாமதம் காரணமாக ரூ.14.37 கோடி அளவுக்கு வீண் செலவுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறது.
"தமிழக காவல்துறைக்காக கடந்த 2015ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அவற்றுள் காவல் கட்டுப்பாட்டு அறைகளை நவீனமயமாக்குதலும் சென்னையில் கண்காணிப்புக் கருவிகளைப் பரவலாக நிறுவுவதும் முக்கிய திட்டமாகும்.
"தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கம் இன்னும் எட்டப்படவில்லை. எனவே, மத்திய அரசின் நிதியை இதுவரை செலவிடவில்லை," என கணக்குத்தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகக் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு 60 விழுக்காடு நிதி ஒதுக்குகிறது.

