சென்னை: நாட்டு மக்கள் உடல்நலத்துடன் இருக்க அனைவருக்கும் சுகாதாரமான உணவுகளும் உணவுப் பொருள்களும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதை சாத்தியப்படுத்த ஏதுவாக நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 உணவுத் தெருக்களை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த அமைச்சு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சுவையான உணவு வகைகள் பிற மாநிலங்களிலும் கிடைப்பதற்கு உணவுத் தெருக்கள் உதவும் என்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்கள் மத்தியில் பாதுகாப்பான, நல்ல உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் இதன்வழி உணவுப்பொருள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அக்கடிதம் தெரிவிக்கிறது.
"இந்தத் திட்டம் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன் சுற்றுலா, பொருளியல் வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் வழங்கும்.
"இதற்கான நிதியுதவியாக ஒரு உணவுத் தெருவுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும்," என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

