சென்னை: மோசடிச் செயல்களை அரங்கேற்ற பயன்படுத்தப்பட்ட 19,000 கைப்பேசி எண்களை நிரந்தரமாக முடக்கிவிட்டது தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு.
மோசடி அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் அனைத்துமே நிரந்தரமாக முடக்கப்படும் என அப்பிரிவின் ஏடிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
இணையக் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நூதன முறைகளைப் பயன்படுத்தி அக்குற்றச் செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
பெரும்பாலும் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் நடைமுறைக்கான கோரிக்கைகள், ஆதார் எண், நிரந்தர வருமான வரிக் கணக்கு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை வைத்து மோசடி செய்கிறார்கள்.
"இப்போது மத்திய உள்துறை அமைச்சு மூலம் இணையக் குற்றத்தடுப்பு, ஒருங்கிணைப்பு மையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் கைப்பேசி எண்களை நிரந்தரமாக தடை செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது," என்றார் திரு சஞ்சய் குமார்.

