மதுரை: நான்கு முக்கிய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் அச்சிடப்பட்ட தங்கச் சுவடி மதுரையில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தமிழகக் கோவில்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு என அரசு சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றான ஏடகநாதர் கோவிலில் இக்குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தங்க ஏடு கண்டெடுக்கப்பட்டது. மேலும், கோவிலின் வரவு, செலவு கணக்கு அடங்கிய ஓலைச்சுவடிக்கட்டும் காணப்பட்டது.
தமிழகத்தில் பக்தி இலக்கியப் பாடல் பதிக்கப்பட்ட தங்க ஏடு கிடைப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 45 ஆயிரத்துக்கும் மேலான கோவில்களில் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருவதாகக் கோவில் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடித்துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
"கோவில் தல புராணப்படி திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' எனும் பதிகம் எழுதி, வைகை நதியிலிட்டதன் நினைவாக அப்பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
"எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எங்களுடைய ஆய்வு நீடித்து வருகிறது," என்றும் தாமரைப் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

