12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என அச்சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் மே 12ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளும் தொழிற் சங்கங்களும் புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ஒன்பது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு நாடுகளில் ஐந்து நாள்கள் வேலை, நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் வேலை என்று வேலை நேரத்தைக் குறைத்து வரும் நிலையில், முதல்முறையாக வேலை நேரத்தை அதிகரித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதுபோன்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன என்றும் மத்திய அரசால் இதுவரை செயல்படுத்த முடியாத சட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த முனைவது கண்டனத்துக்குரியது என்றும் மற்றொரு தீர்மானம் தெரிவிக்கிறது.
"மசோதா தொடர்பாகப் பேரம் பேசி உடன்பாட்டுக்கு வருவது எந்த வகையிலும் சாத்தியமானதல்ல. எனவே, தமிழக அரசு இந்த மசோதாவைக் கைவிட வேண்டும்.
"புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனப் பிரசாரம், மறியல், வேலை நிறுத்தம் எனப் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்," என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, 12 மணி நேர வேலை சட்டம் தமிழக தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
காலம் மாறி வருவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

