சென்னை: காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களை கண்ணியமாக விசாரித்து, புகாரின் தன்மைக்கேற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழகக் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எத்தகைய வழக்காக இருந்தாலும் காவல்துறையினர் கண்ணியமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழகக் காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.
இதற்காகக் காவல் ஆய்வாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் அதிகபட்சமாக நூறு அதிகாரிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
டிஜிபியும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மோசமாக நடந்துகொள்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நெல்லையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் விசாரணை என்ற பெயரில் பலரைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் மேற்கொள்ள வசதியாக புதிதாக சிறப்புச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் அடுத்தடுத்த உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க இயலும் எனக் கூறப்படுகிறது.
காவல்துறையில் நிர்வாக ரீதியிலான பெரும்பாலான பணிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு என தனிச்செயலி அறிமுகமாக உள்ளது.

