கடும் எதிர்ப்பால் 12 மணி நேர வேலை, மதுபான விற்பனை முடிவுகளில் பின்வாங்கியது
சென்னை: தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசாங்கம் திங்கட்கிழமை ஒரே நாளில் தன்னுடைய இரண்டு கொள்கை முடிவுகளில் இருந்து பின்வாங்கிவிட்டது.
பல தரப்புகளும் குறிப்பாக எதிர்த்தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதே அதற்கான காரணம்.
தொழிற்சாலை (திருத்தம்) சட்டம் 2023 என்ற ஒரு சட்ட வரைவை அரசாங்கம் நிறுத்திவைத்துவிட்டது. சில வகை ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்க அந்தச் சட்ட வரைவு வகை செய்கிறது.
அதன்படி, குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கலாம். வாரத்தில் ஊழியர்கள் மொத்தம் 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த உத்தேச சட்டம் தெரிவித்தது.
இப்படி வேலை நேரத்தை மாற்றினால் அரசாங்கம் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். இதனால் மின்னணு, தோல் சாராத காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பெரும் ஊக்கம் கிடைக்கும் என்று அரசாங்கம் விளக்கம் அளித்தது.
ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மற்ற தரப்புகளும் அந்த ஏற்பாட்டை கடுமையாக எதிர்த்தன. அதனால் ஊழியர்களின் உரிமை பறிபோகும் என்று அவை வாதிட்டன.
அரசாங்கம் பல தரப்புகளுடன் விவாதிப்பு கூட்டம் நடத்தியது. அதனையடுத்து 12 மணி நேர வேலை முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
இதேபோல, மற்றொரு கொள்கையிலும் தமிழக அரசு பல்டி அடித்தது. மாநாடுகள், திருமணங்கள், விளையாட்டு அரங்குகள், குடும்ப கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றிலும் சிறப்பு உரிமம் பெற்று மதுபானத்தைப் பரிமாறலாம் என்று அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்தது.
அத்தகைய சிறப்பு உரிமம் ஏற்பாடுகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் புதுடெல்லியிலும் நடப்பில் இருப்பதை தமிழக அரசு சுட்டியது.
ஆனால், எதிர்த்தரப்புகள் கடுமையாக எதிர்த்தன. அத்தகைய ஓர் ஏற்பாடு சமூக ஒழுங்கையே சீர்குலைத்துவிடும். ஏற்கெனவே பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் சட்ட ஒழுங்கு மேலும் சீர்கெட்டுவிடும் என்று எதிர்த்தரப்புகள் கடுமையாகக் குறைகூறின.
இதையடுத்து தமிழக அரசு கொண்டாட்டம், விழாக்களில் சிறப்பு மதுபான உரிமத்திற்கு அனுமதி இல்லை என்று முடிவு செய்தது.
வணிக வளாக மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், பன்னாட்டு நிகழ்ச்சிகள், உச்சநிலை மாநாடுகள், அனைத்துலக தேசிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

