சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முப்பரிமாண தொழில்நுட்பத்தில் செயற்கை மண்டை ஓட்டைச் செய்து மூன்று பேருக்கு வெற்றிகரமான முறையில் அறுவைசிகிச்சை நடத்தி இருக்கிறது.
அந்தச் சிகிச்சையைச் செய்துகொண்ட கல்லூரி மாணவர், குளிரூட்டிச் சாதன நிபுணர், தச்சு தொழிலாளி ஆகிய மூவரும் நன்கு குணமடைந்து வருவதாக மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த மூவரும் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு நரம்பு ஒட்டுஉறுப்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழு முடிவு செய்தது.
முதலில் அந்த மூவருக்கும் தலையில் அடிபட்ட இடத்தில் மண்டை ஓடு அகற்றப்பட்டது. ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அகற்றப்பட்ட மண்டை ஓட்டிற்குப் பதிலாக முப்பரிமாண தொழில்நுட்பத்தின்படி செயற்கையாக மண்டை ஓட்டைச் செய்து பொருத்துவதற்கு மருத்துவக் குழு முடிவு செய்தது.
முதலாவதாக நோயாளிகளின் தலைகள் முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு கபாலத்தில் எந்த அளவுக்கு அடைக்க வேண்டும் என்பது துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.
அதன் அடிப்படையில் டைட்டானியம் என்ற பொருளைக் கொண்டு செயற்கை மண்டை ஓடு உருவாக்கப்பட்டு மூவருக்கும் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அந்த மூவரும் நன்கு குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
இதனிடையே, அந்த அறுவை சிகிச்சை பற்றி கருத்துக் கூறிய அந்த மருத்துவமனையின் நரம் பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் நாராயண சாமி, "முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் செயற்கை மண்டை ஓட்டை உருவாக்கி சிகிச்சை அளிப்பதால் தலையில் தழும்பு எதுவும் தெரியாது. நான்காவதாக மேலும் ஒருவருக்கு இதே போன்ற சிகிச்சை அளிக்க இருக்கிறோம்," என்று கூறினார்.
இந்தச் சிகிச்சை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதால் இதற்கான தலா ரூ.5 லட்சம் கட்டணத்தை நோயாளிகள் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.

