சென்னை: உள்நாட்டுப் போரால் சூடானில் பதற்றம் நிலவும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களைத் தாயகம் அழைத்துவரும் "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
"சூடானில் பாதுகாப்புச் சூழல் சிக்கலாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது. இவ்வேளையில் அங்கிருந்து இந்தியர்கள் விரைவாக வெளியேறுவதற்கு ஏதுவாக இந்திய விமானப்படை விமானமும் இந்தியக் கடற்படை கப்பல்களும் அந்நாட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஆறுதலளிக்கிறது," என்று முதல்வர் தம் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 400 பேர் சூடானில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் தாயகம் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்துப் பிரதமரின் கவனத்திற்குத் தாம் கொண்டுவர விரும்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி 'ஐஎன்எஸ் சுமேதா' என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகத் திரு ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கை தொடர்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், சூடானில் அவதியுறும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசு தயார் நிலையில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் உறுதி அளித்து உள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சுடனும் சூடானில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துடனும் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகமுதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணி சூடானில் சிக்கியுள்ள ஏறக்குறைய 3,000 இந்தியர்களை மீட்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 530 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 250 பேர் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகவும் 278 பேர் இந்தியக் கப்பற்படையின் போர்க் கப்பல் மூலமாகவும் மீட்கப்பட்டனர்.
சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் சவூதி அரேபியா கொண்டுசெல்லப்பட்டனர்.

