முதல்வர்: அமைதியான மாநிலம் என்பதால் தொழில்முனைவர்கள் வருகிறார்கள்
சென்னை: ஒரு மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்குதான் மிக முக்கியமானதாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு புதிய தொழில் முனைவோர் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு மாநிலத்தில் அமைதி நிலவுவதுதான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்ட அவர், மூன்று மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கையும் பொது அமைதியையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு காவல்துறை உறுதுணையாக உள்ளதாகப் பாராட்டு தெரிவித்தார்.
"அமைதியான மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படுவதற்கு இதுவே சான்றாகும். சில சமயங்களில் சில பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்னர் அவை பெரிதாகிவிடுகிறது. அந்தப் பிரச்சினைகள் குறித்த செய்திகள் விரைவாக பரவி விடுகின்றன.
"எனவே, சிறு சம்பவங்கள்கூட கவனிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
காவல்துறையினர் சமூக ஊடகங்களின் வீச்சையும் அவற்றின் தாக்கத்தையும் சரியாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மீனவர்கள், மகளிர் குழுக்கள், தொழில்முனைவர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மூன்று மாவட்ட தேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

