புதுடெல்லி: அதிமுக, பாஜக இடையேயான தேர்தல் கூட்டணி நீடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, தமக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே எந்தவித தகராறும் இல்லை என்றார். மேலும் அதிமுக, பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சி செய்வதாகவும் அவர் சாடினார்.
"ஒவ்வோர் அரசியல் கட்சியும் அதனதன் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அதேபோல் ஒற்றுமையாகச் செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்," என்றார் பழனிசாமி.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையம் முழுமையான தீர்ப்பை வழங்கிவிட்டது என்றார்.
"மேலும், நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்களிடம்தான் உள்ளது. துரோகம் செய்பவர்களுக்கு கட்சியில் மீண்டும் இடம் கிடையாது," என்றார் பழனிசாமி.
அதிமுக தலைமைக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இருதரப்புக்கும் இடையே வார்த்தைப் போரும் நீடித்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு கூட்டணி நீடிக்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க இயலாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடகத் தகவல் கூறுகிறது. இரு தரப்புக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

