புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு அதிபர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு அதிபருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் அதற்கேற்ப நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசியபோது, மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை அதிபர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற உள்ளது. சென்னை கிண்டி பகுதியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், ஆறு மாடிகளுடன் உருவாகி உள்ளது பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை.
மேலும், சென்னையில் காலஞ்சென்ற முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவும் நடைபெறுகிறது.
இந்த இரு நிகழ்வுகளிலும் இந்திய அதிபர் பங்கேற்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, அதிபரை நேரில் சந்திக்கும்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் எனக் கூறி, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொள்வார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் விவரங்கள் ஏதுமில்லை.
இதனிடையே, டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்செயலாகச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரும் என்ன பேசினர் என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
முன்னதாக, டெல்லி சென்ற தமிழக முதல்வருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பன்னோக்கு மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு

