காஞ்சிபுரம்: பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சென்னையின் புறநகர்ப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை ஒன்பது தனிப்படைகளை அமைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் பிபிஜிடி சங்கர். இவர் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின அணியின் பொருளாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் சங்கர். அப்போது நசரத்பேட்டை என்ற பகுதியில் அவரது காரை தடுத்து நிறுத்திய மர்மக் கும்பல் ஒன்று கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் அந்த கார் பலத்த சேதமடைந்த நிலையில், சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிபிஜிடி சங்கர் காரில் இருந்து இறங்கி தப்பியோடினார். எனினும் அக்கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்றது.
திரைப்படத்தில் இடம்பெறும் துரத்தல் காட்சியைப் போல், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அந்தக் கும்பல் விரட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடிய சங்கரை திடீரென எதிரே தோன்றிய மற்றொரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்தது.
இதில் படுகாயமடைந்த சங்கர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ள நிலையில், தொழில் போட்டி காரணமாக சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு பிபிஜிடி குமரன் என்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குமரனின் நெருங்கிய உறவினர் பிபிஜிடி சங்கரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

