சென்னை: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு, மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த ரூ.57.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இப்பணி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
"ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிறந்த மருத்துவச் சேவையை பெறுவதற்கு பலர் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள்.
"எனவே, தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
"அந்த வகையில், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.65 கோடியும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதுக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது," என்று குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் பல அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் மேம்பாட்டுப் பணிகளைப் பட்டியலிட்டார்.
தமிழகத்தில் போதைப்பொருள்கள் விற்பனை தொடர்பான தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

