சென்னை: கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து, தமிழக அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிவமோகா பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த கர்நாடக பாஜக நிர்வாகி ஈஸ்வரப்பா குறுக்கிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விழா அமைப்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என திமுக எம்பி கனிமொழி சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதைக் கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதனிடையே, அக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
"ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய மாநில கீதத்தைப் பாடிய பிறகே மற்ற மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அதைத்தான் பாஜக நிர்வாகி ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டினார்," என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

