சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கடலுக்கு நடுவே 'கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்' அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது.
கடற்கரையிலிருந்து 360 மீ. தொலைவில் அமையவுள்ள பேனா சின்னத்தின் உயரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்படவுள்ள பாலம், தரைப் பகுதியில் 290 மீ. நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீ. உயரத்தில் 360 மீ. நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீ. கண்ணாடியாலான தளமாகும்.
நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கருத்துருக்களுக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் அனுமதி கிடைத்து.
திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சீமான் எதிர்ப்பு
இதற்கிடையே, நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"விதிகளுக்குப் புறம்பாக மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.
"சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார். மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனை எடுத்துக்கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை மத்திய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

