சென்னை: மதிமுகவை, தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதிய நிலையில், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இணைப்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், தங்களது அண்மைக் கால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கட்சி உறுப்பினர்கள், தங்களைப் புதுப்பித்துக்கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை இல்லை என்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.
மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்குத் துளியும் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியதாகவும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

