வண்டலூர்: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று வருகையளித்தார்.
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கலைஞரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.
“பேருந்து நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளின் வாகனங்கள், பார்க்கிங் இடம், 4 தங்குமிடம், 4 உணவுக் கூடங்கள் அமைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.