சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்; கால நிலை மாற்ற பாதிப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை
கோவை: காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் தமிழகம், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்கள்தான் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக கோவையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
"மின்சார வாரியம், போக்குவரத்து, தொழில்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளால்தான் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கிறது.
"உலகளவில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.
"இந்தப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது," என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
ராமேசுவரம், ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகளில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த கட்ட பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"டெல்டா மண்டலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
"எனது சொந்த ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டியுள்ளது. என் வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. தமிழகத்தில் வெப்பத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
"2050க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
"பொது இடங்களில் மரங்களை நடுவது, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர்நிலைகளைப் பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்துவதுடன் அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

