திருவள்ளூர்: மது வாங்கித் தராத கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் தர்மய்யா. இவர் தன் மனைவி லட்சுமியுடன் அங்கு வசித்து வந்தார்.
கணவன், மனைவி இருவருக்கும் தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி லட்சுமி திடீரென மாயமானார். அவருக்கு என்னவானது என்று தெரியாத நிலையில், கடந்த 27ஆம் தேதி தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தர்மய்யா தலைமறைவானார். காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் வைத்து அவரைத் தனிப்படையினர் கைது செய்தனர்.
விசாரணையில் கணவரும் மனைவியும் தினமும் இணைந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று லட்சுமிக்கு மது வாங்கித் தராமல் தர்மய்யா மட்டும் குடித்துள்ளார். இதனால் மறுநாள் லட்சுமி வீட்டில் சமைக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது.
அப்போது லட்சுமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளார். எனினும் ஆத்திரம் குறையாத நிலையில் தர்மய்யா, வீட்டில் இருந்த அரிவாளைக் கொண்டு தாக்கியதில் லட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடலை மாந்தோப்பில் புதைத்துவிட்டு தர்மய்யா தலைமறைவாகி உள்ளார்.

