சென்னை: தேர்தல் செலவுக் கணக்கை முறைப்படி தாக்கல் செய்யாத மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் உள்பட 6 பேருக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவுக் கணக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் இவ்வாறு தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவுக் கணக்கை காட்டாத சங்கரன்கோவில் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரபு உள்ளிட்ட ஆறு பேருக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
இவர்களில் ஒருவர் அதிமுகவைச் சேர்ந்தவர். மற்ற நால்வரும் சுயேச்சைகள் ஆவர்.

