சென்னை: சென்னை பெரவள்ளூர் பகுதி அருகே சாலையில் போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழ் நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் சரக்கு வாகனம் ஒன்றில் வைத்துக் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சரக்கு வாகனத்தில் 50 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த மூட்டைகளில் கிட்டத்தட்ட 1,650 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அது தொடர்பாக கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்த 55 வயது செல்லப்பா என்பவரையும் 42 வயதாகும் சசிகுமார் என்பவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்திவந்த போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு ஆடவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

