சென்னை: கடந்த 25 ஆண்டுகளாக தினமும் தன்னைத் தேடி வந்த நான்காயிரம் பறவைகளுக்கு இரையிட்டு வந்துள்ளார் சேகர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அவரை 'பறவை மனிதர்' என்றே அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்துவிட்டார். மின்னணு கேமராக்களைப் பழுது பார்க்கும் வல்லுநரான அவர், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ராயப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார்.
பின்னர் அந்த வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு இரை வைக்கத் தொடங்கினார். இரை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து நான்காயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்றுவிட்டார். அதனால் அண்மையில் வேறு வீட்டில் குடியேறி உள்ளார் சேகர். இதனால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகக் கவலைப்படுகிறார் சேகர்.
சேகர் வசித்த வீட்டின் உரிமையாளர் அதை விற்க முயன்றபோது, இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க விரும்பினர். ஆனால் உரிமையாளர் அதற்கு உடன்படாததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகச் சொல்கிறார் சேகர்.

