சென்னை: சென்னை மாதவரம்-தரமணி வரையிலான வழித்தடத்தில் 29 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடங்களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ெசன்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தின்கீழ் மாதவரம்-தரமணி வரையிலான வழித்தடத்தில் 29 சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி.மீ.), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ.) என மொத்தம் 118.9 கி.மீ. நீளத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாதவரம்-தரமணி வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
கடந்த 2021ல் இந்த வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு ஐந்து நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தன.
எனினும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிர்ணயித்த 'டெண்டர்' தொகையோடு ஒத்துப் போகாததால் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி காலதாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில், தற்பொழுது மாதவரம்-தரமணி வரையிலான வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

