நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய கோடை காலத்தில் 18% அதிக மழை பதிவு
சென்னை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் நிலவினாலும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவி வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை உருவாகும் என கணிக்கப்பட்ட புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது திங்கட்கிழமை உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாளை 8ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது 9ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். இதையடுத்து தமிழகத்திலும் புதுவையிலும் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
"சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்," என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதும் வழக்கம்.
இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அதிக வெப்பம் இன்றி பொதுமக்கள் நிம்மதியாக உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன், வரும் 9ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றார். எனவே இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே நடப்பாண்டில் நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங் களில் வழக்கத்தைவிட 18 விழுக்காடு அதிக மழை பதிவாகியுள்ளது என்றும் நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய கோடைகாலத்தில் இயல்பைவிட 28 விழுக்காடு அதிக மழை பெய்துள்ளது என்றும் அம்மையம் கூறியுள்ளது.
எனினும் நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 29% அளவுக்கு மழை குறைந்துள்ளது.

