சென்னை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,281 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் புதிய பாலங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாலங்களுக்கான கட்டுமானத்துக்கு முந்தைய பணிகளான மின் கம்பங்கள், குடிநீர் குழாய்களை இடம் மாற்றுவது, மரங்களை அகற்றுதல், நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பாலங்களுக்கான கட்டுமானப் பணியின்போது ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாலத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.