திருச்சி: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் திடீரென கருகிய புகை வாசம் வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனீசியாவில் தரை இறக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் இந்தோனீசியாவில் தரையிறக்கப்பட்டதும் உரிய பாதுகாப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்ட சோதனையின்போது எந்தவிதமான பழுதும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அது தரையிறக்கப்பட்ட கோலநாமு (Kualanamu) நகரில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாற்று விமானம் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இண்டிகோ விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்டபோது அதன் மீது பறவை மோதியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் ஆய்வு நடவடிக்கைக்காக அது இந்தோனீசியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அந்த விமானத்தின் விமானி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியதாக இண்டிகோ நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

