கோவை: நடப்பாண்டில் தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாகக் கோவையில் கோடை மழை 197 விழுக்காடு கூடுதலாகப் பெய்தது தெரியவந்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகால சராசரியை ஆய்வு செய்யும்போது இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை மழை 109 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் கோடை மழையின் சராசரி 83.5 மில்லி மீட்டர் ஆகும். இந்நிலையில் நடப்பாண்டில் நேற்று முன்தினம் வரை 174.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கோவையில் கோடை மழையின் 30 ஆண்டு சராசரி அளவு 108.1 மில்லி மீட்டராகும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 321.2 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் 20 நாள்களுக்குக் கோடை மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் ஒட்டுமொத்த மழைப்பொழிவு விகிதம் அதிகரிக்கக்கூடும்
இதனிடையே, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தல்லாகுளம், திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சுருளக்கோடு, நிலக்கோட்டை, முள்ளங்கினாவிளை, மதுரை தெற்கில் தலா 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்றும் பெருஞ்சாணி அணை, நாமக்கல், திருபுவனம், புத்தன் அணை, மேட்டுப்பட்டி, மதுரை வடக்கில் தலா 4 சென்டி மீட்டர் மழை கொட்டியுள்ளது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

