சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரைக் கண்டறிந்து கைது செய்ய ஏதுவாக மாநிலம் முழுவதும் காவல்துறை சிறப்புத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 12 பேர் மாண்டுவிட்டனர். மேலும் சிலர் கடும் பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் மீது 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 57 பேர் பேரும் திருவாரூர் மாவட்டத்தில் 47 பேரும் கைதாகி உள்ளனர் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். இவர்களில் டாஸ்மாக் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து விற்போரும் அடங்குவர். கள்ளச்சாராயம் விற்பவர்களைக் கைது செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிலருக்கு வலைவீசப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையின்போது மேலும் பலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று விழுப்புரம் மாவட்டத்துக்குச் சென்ற அவர், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு; 136 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது

