திருவாரூர்: விஜய் மக்கள் இயக்கமானது எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக அந்த இயக்கத்தின் மாணவரணிச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் பிறந்தநாளுக்கு பின்பு நல்ல ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் தொண்டர்கள் ஆசைப்படுவது போல் முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
"விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்த மாதம் சென்னையில் பெரிய அளவில் கூட்டம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.
"இந்த மாத இறுதிக்குள் ஆய்வு முடிவுகளை தலைமையகத்துக்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதுகுறித்து தெரிவிக்கலாம். எனினும் மக்கள் இயக்கம் சார்பில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பது குறித்து விஜய்தான் முடிவெடுப்பார்," என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் களம் காண்பது தொடர்பாக அவ்வப்போது ஆரூடச் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் யாரும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிட்டதில்லை.
இந்நிலையில், மாணவரணி நிர்வாகி தெரிவித்துள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

