சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருகிறது.
நேற்று முன்தினம் 14 மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் வெயிலுக்கு அஞ்சி பெரும்பாலான நேரம் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கோடை மழை தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கி உள்ளது.
அக்னி நட்சத்திரத்தின்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம்.
அதற்கேற்ப கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக தமிழக மக்களை வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக அடுத்த ஐந்து நாள்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் வரும் 29ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் 117 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக கோடை காலத்துக்கு ஏற்ற பழங்களின் விற்பனை தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து இப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இளநீர், நுங்கு, நீர் மோர், தர்பூசணிப் பழங்கள், பழரசங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நேற்று வெயிலின் கடுமை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக பொது மக்கள் கூறினர்.

