இரு சம்பவங்களில் மரணம் 18 ஆகியது; கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை
சென்னை: தமிழ்நாட்டின் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த இரண்டு கள்ளச்சாராய சம்பவங்களில் மாண்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் துடைத்தொழிக்கப்படும். கள்ளச்சாராயப் பேர்வழிகள் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மலை வனப்பகுதிகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாநில காவல்துறை உயர் அதிகாரி சி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். காவல்துறை தலைமை இயக்குநரான அவர் திங்கட்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"இரண்டு கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாள்களில் மாநிலம் முழுவதும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,842 வழக்குகள் பதியப்பட்டடன.
"மாநிலம் முழுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயக் கட்டமைப்புகளை நசுக்கி துடைத்தொழிக்கும்படி அதிகாரிகளுக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
மொத்தம் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 4,973 2லிட்டர் ஊரல் அழிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை கள்ளச்சாராயம் தொடர்பில் 4,534 பெண்கள் உட்பட 55,173 பேர் கைது செய்யப்பட்டனர். 55,474 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் அதிகாரிகள் தீவிர கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கள்ளச்சாராயத்தைக் குடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறும் இயக்கத்தைத் தொடங்கி உள்ள அதிகாரிகள், பல தொலைபேசி எண்களை வெளியிட்டு சாராயம் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த மாநில சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன், மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

