கோவை: கோவை ஆனைக்கட்டி வட்டாரம் யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதி. இந்தப் பகுதியில் மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல், 23, என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் நடந்து சென்றபோது காட்டு யானை ஒன்று குறுக்கிட்டு கடுமையாகத் தாக்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து அவரை மீட்டு கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்குக் சென்றனர். அவரது மார்பு எலும்பு முறிந்து, வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து தடாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

