சென்னை: கள்ளச்சாராய மரணங்கள் குறித்தும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாகத் தகவல் அளிக்க 10581 என்னும் தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களிடம் பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த எண் மூலமாகவும் வாட்ஸ்அப் வாயிலாகவும் பெறப்படும் புகார்களை கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.
"கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைக் கொண்டு நடத்த வேண்டும்.
"கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களைத் தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
"தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருக்குமாறு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விஷச்சாராயம்
இதற்கிடையே, 22 உயிர்களைப் பலிவாங்கியது கள்ளச்சாராயம் அல்ல என்றும் மெத்தனால் கலக்கப்பட்ட விஷச்சாராயம் என்றும் தலைமைக் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

