சென்னை: கோடை வெப்பம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கோடை வெப்பத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் பல்வேறு அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், மேலும் பல அறிவுரைகளை வழங்கினார். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை ஆணையர் பிரபாகர் கூறினார்.
மதிய வேளையில் வெளியே செல்பவர்கள் குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்வதை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அன்றாட வெப்பநிலை தொடர்ந்து 37.7 டிகிரி செல்சியசாக பதிவாகி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

