சென்னை: மகன்களின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் பதற்றம் நிலவியது.
அப்பகுதியைச் சேர்ந்த 40 வயதான சீனிவாசன் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு அருகே உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பிய அவர், வீட்டுக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சீனிவாசன் மீது தாக்குதல் நடத்தினர்.
அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்க முற்பட்ட சீனிவாசனின் இரு மகன்களில் இளையவரான 15 வயது பிரதாப்புக்கும் வலது கையில் வெட்டு விழுந்தது. மகன்கள் கண் எதிரேயே சீனிவாசனை வெட்டிக்கொன்றுவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பாக சீனிவாசனுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே நிலவி வந்த முன்பகை காரணமாக அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

