சென்னை: மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதி மன அழுத்தம் ஏற்பட்ட மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவது நீடிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நடவடிக்கையானது 2020-21இல் தொடங்கப்பட்டது என்றும் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில் ஏறத்தாழ 147,000 மாணவ, மாணவியர்க்கு மனநல ஆலோசனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 24 மணி நேரமும் இந்தப் பணி நடைபெறும் என்றார்.
மேலும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 46,932 மாணவ, மாணவியர்க்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
"நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
"கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழகத்துக்கு ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கேள்விகள் அடங்கிய குறிப்பாணை வந்தது. "அந்தக் கேள்விகளுக்கு கடந்த 10ஆம் தேதி சட்டத்துறை மூலம் பதில் அளிக்கப்பட்டு, உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான முயற்சி இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்றும் ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கியதுபோல, நீட் தேர்வுக்கும் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

