சென்னையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
சென்னை: தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் குடிநீர் கேன்கள் தரமற்று இருப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து சென்னையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது தரமற்ற கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைத் தயாரித்து விநியோகித்த நிறுவனங்கள், வியாபாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்று சென்னை திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உணவுப்பொருள் பாதுகாப்புப் பிரிவு ஆணையர் லால்வீனா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான குடிநீர் கேன்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. அவற்றை முறையாகச் சுத்தப்படுத்தாமலேயே மீண்டும் குடிநீரை நிரப்பி விநியோகிக்கத் திட்டமிட்டிருந்ததையும் அதிகாரிகள் அறிந்தனர்.
மேலும், கேன்களில் அடைக்கப்படும் குடிநீரும் தரமற்று இருப்பதைக் கண்டு அதிகாரிகள் குழு கடும் அதிர்ச்சி அடைந்தது.
உடனடியாக அந்தக் கேன்களைப் பறிமுதல் செய்ய ஆணையர் லால்வீனா உத்தரவிட்டார்.
அதையடுத்து, தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான உரிமம், கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அந்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, எவ்வாறு சுகாதாரமான முறையில் குடிநீர் கேன்களை விநியோகிக்க வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் தெரியுமா என்று அதிகாரிகள் விசாரித்து அறிந்தனர்.
இதையடுத்து குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் கடைகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
அப்போது ஐஎஸ்ஐ தர முத்திரை இல்லாத கேன்கள், சுகாதாரமற்ற நிலையில் உள்ள குடிநீர் கேன்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோடை காலம் என்பதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

