நாமக்கல்: மூன்றே மாதங்கள் தயார்செய்து 10ஆம் வகுப்புக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் 56 வயது பி. தனம்.
இவர் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர்.
யோகாசன பயிற்றுவிப்பாளராகும் கனவை நனவாக்க இவர் இந்தத் தேர்வை எழுதினார்.
திருவாட்டி தனத்துக்கும் இவரின் 60 வயது கணவரான தமிழ் மணிக்கும் திருமணமான இரண்டு மகன்களும் பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு யோகாசனத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட திருவாட்டி தனத்துக்குப் பயிற்றுவிப்பாளராகும் ஆசை எழுந்தது.
அதற்குப் பட்டயக் கல்வி மேற்கொள்ளவேண்டும், அதற்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்றால்தான் முடியும் என்பதை இவர் தெரிந்துகொண்டார்.
15 வயதில் திருமணம் செய்துகொண்ட திருவாட்டி தனம் 1980ஆம் ஆண்டில் ஒன்பதாவது வகுப்பை முடித்துவிட்டு படிப்பை நிறுத்திக்கொண்டார்.
இப்போது தனியார் துணைப்பாட வகுப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்று மூன்றே மாதங்களில் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வை எழுதியிருக்கிறார்.