பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
சென்னை: தேசியக்கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்துக்கு என தனித் துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கை தேவை என்பதால் அதை வகுக்க வேண்டும் என அரசு உறுதிபூண்டுள்ளது.
"இதற்கென, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
உயர்மட்டக் குழு தொடர்பான அரசாணையை கடந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி அரசு வெளியிட்டது என்றும் அதன்படி, கடந்த ஓராண்டு காலமாக இக்குழு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட பலருடனும் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"இக்குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது.
"தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இக்குழு செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த குழுவின் செயல்பாடுகள் மீது அரசு முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன்படி 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் அக்குழு தனது அறிக்கையை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
குழுவின் அறிக்கை கிடைத்ததும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலிக்கும் என்றும் தமிழக மாணவர்களின் எதிர்கால நலன், மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கென சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

