குமரி: தனது காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, அவரையே மணம் முடித்துள்ளார் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம்பெண் ரிமோல் விண்ணரசி.
24 வயதான இவருக்கும் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதான லெனின் கிராஸ் என்பவருக்கும் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் காதலர்களாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். லெனின் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளலாம் என்று லெனின் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, அவருடன் ரிமோல் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் ஊர் திரும்பிய லெனினுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். இதை அறிந்த ரிமோல் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 11ஆம் தேதி லெனினின் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து திருமணம் நடைபெற இருந்த தேவாலயத்துக்கு நேரில் சென்று அங்குள்ள பங்குத்தந்தையிடம் முறையிட்டார் ரிமோல். இதனால் திருமணம் தடைபட்டது. எனினும் ரிமோலை திருமணம் செய்துகொள்ள லெனின் மறுத்தார்.
இதனால் காவல்துறையில் முறையிடப்பட்டது. காவல்துறையினரிடம் லெனினுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், துபாயில் இருந்து தன் செலவுகளுக்காக லெனின் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அவர் காண்பித்தார். இதையடுத்து ரிமோலை திருமணம் செய்துகொள்ளுமாறு காவல்துறையினர் லெனினுக்கு அறிவுரை வழங்கினர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு லெனின், ரிமோல் திருமணம் நடைபெற்றது.
போராடி காதலனைக் கைப்பிடித்த ரிமோலை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி உள்ளனர்.

