சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய கே.பி. அன்பழகன், சி.விஜயபாஸ்கர்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் தமிழக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், இது பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ள ஊழல்கள் தொடர்பில் பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்ழகன், சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. அதன் பிறகு இது தொடர்பாகத் தீவிர விசாரணையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கே.பி.அன்ழகன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தர்மபுரி நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலும் 216 பக்க குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது.
அமைச்சராகப் பதவி வகித்தபோது கே.பி.அன்ழகன் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக அன்பழகன் பதவி வகித்தார். சொத்துக்குவிப்புப் புகார்களை அடுத்து கடந்த ஆண்டு கே.பி.அன்பழகனுடன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ரூ.2.87 கோடி ரொக்கப்பணம் 6.6 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளிப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அன்பகழன் மீதும் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட மேலும் 11 பேர் மீதும் வழக்குப்பதிவானது. இந்த வழக்கில்தான் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் சி.விஜயபாஸ்கர். அச்சமயம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் வழக்குப் பதிவானது.
அதையடுத்து விஜயபாஸ்கருடன் தொடர்புடைய முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

