சென்னை: அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்குத் தமிழ் மொழியைத் திறம்படக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் நியமிக்க வேண்டும் எனவும் அரசாணை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மற்ற பாடங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்படும் காலமுறை தேர்வுகள் தமிழ் பாடத்திற்கும் நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்," என தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு கற்றல் சட்டமானது 2006இன் படி 2015-16ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"அதன்படி, 2024-2025ஆம் கல்வியாண்டிற்குள் மாநில பாடத்திட்டத்தை தவிர, அனைத்து வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
"தனியார் பள்ளிகளின் இயக்குனர் பாடத்திட்டம், அதற்கான தேர்வு முறையை நிர்ணயிப்பார். அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், 10ஆம் வகுப்பு தமிழ்த் தாளுக்கான இறுதி எழுத்துத் தேர்வு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரால் நடத்தப்படும். பின்னர் அதற்கென தனிச் சான்றிதழ் வழங்கப்படும்," என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

