குமரி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் அனைத்துலக எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்திய வீரர்களின் சுற்றுக்காவல் பணியின்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்களின் விசைப்படகு தென்பட்டது. விசைப்படகை சுற்றி வளைத்த பின்னர் நடத்திய விசாரணையின்போது, இலங்கை நீர்க்கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 17ஆம் தேதி மீன் பிடிக்க வந்ததாகவும் வழி தவறி இந்திய கடற்பகுதியில் நுழைந்துவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் கடலோரப் பாதுகாப்பு படையினர் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

