மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அக்குறிப்பிட்ட கல்லூரியில் மயக்கவியல் துறையில் பணியாற்றி வரும் தாஹிர் உசைன் என்பவர் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக 18 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
பேராசிரியர் ஒருவரும்கூட தாஹிர் உசைன் குறித்து புகார் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையின்போது மாணவிகள், இரு பேராசிரியர்கள் உள்ளிட்ட 23 பேர் தங்கள் புகாரை எழுத்துபூர்வமாக அளித்துள்ளனர்.
பாலியல் உள்ளநோக்கத்தோடு தொடுவது, பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசுவது, மோசமாக வர்ணிப்பது என தாஹிர் பலவிதமாக தொந்தரவு செய்து வந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உதவிப் பேராசிரியர் தாஹிர், மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்த முயன்றதாலும் நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் எழுப்பியதாலும் தாம் பழிவாங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

