கள்ளச்சாராய வழக்குகள் கொலை வழக்காயின; டாஸ்மாக் விற்பனை கூடியது
சென்னை: தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணச் சம்பவங்கள் பற்றி புலன்விசாரணை நடத்தி வரும் சிபி-சிஐடி அதிகாரிகள், அந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள 11 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் மாண்டது குறித்து அந்த 11 பேரையும் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் சிபிசிஐடி கோரிக்கை விடுத்தது.
அதை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் நேற்று அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கியது.
அந்த 11 பேரும் இப்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.
இதனிடையே, அந்த இரண்டு சம்பவங்களிலும் 22 பேர் மரணம் அடைந்த விவகாரத்தைக் கொலை என்று தமிழக காவல்துறை வகைப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் மரக்காணம் பகுதியில் உயிர்ப்பலி ஏற்பட்ட எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்குச் சென்று பலரையும் நேரில் பார்த்து விசாரணை நடத்தினர்.
கள்ளச்சாராய உயிர்ப்பலி சம்பவங்களை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தைத் துடைத்தொழிக்க காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் அதிகாரிகள் கள்ளச்சாராய வேட்டையில் குதித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆரணி பகுதியில் ஏற்கெனவே 50க்கும் மேற்பட்டோர் கைதாகி கள்ளச்சாராய வழக்குப் பதியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்கு மேலும் 60 பேரை அதிகாரிகள் ஆளில்லா வானூர்தி மூலம் தேடி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, மாநிலத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாவதால் அரசாங்கத்திற்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் பெருகி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

