சென்னை: தமிழகத்தை ரத்த சோகை இல்லா மாநிலமாக்கும் முயற்சிகளை ஒட்டி பதின்ம வயதினருக்காக 25,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் அத்தகைய ஒரு முகாமைத்தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்தகைய முகாம்களில் மாணவ, மாணவிகளுக்குச் சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு, ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்புப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12 மில்லியன் பதின்ம வயதினர் பயனடைவர் என்றும் அமைச்சர் கூறினார். மாநிலத்தில் உள்ள பதின்ம வயதினரிடையே பெண்களில் 52.9 விழுக்காட்டினருக்கும் ஆண்களில் 24.6 விழுக்காட்டினருக்கும் ரத்த சோகை இருப்பது தெரியவந்து உள்ளது.
ஆகையால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பதின்ம வய தினரைக் கண்டறிந்து அவர்களுக்கு 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதுடன் ரத்த சோகை இல்லா தமிழகமாக மாற்றுவதே இந்த முகாம்களின் நோக்கம் என அமைச்சர் விளக்கினார்.
முகாம் திட்டத்தின்படி அரசு மருத்துவர்களும் தாதியரும் சுகாதாரத் துறை ஊழியர்களும் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், 2,127 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் முகாம்கள் நடக்கும். ரத்த சோகையைத் துடைத்து ஒழிக்க வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களும் உதவும்.

