சென்னை: தமிழ்நாட்டில் உயா் ரத்த அழுத்த நோய்க்கு ஆளானோரில் கிட்டத்தட்ட 68 விழுக்காட்டினர் தங்களுக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதையே அறியாமல் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறையின் இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக உயா் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும் நீரிழிவு நோய், மன அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்களும் உயா் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கின்றன.
"தமிழகத்தைப் பொறுத்தவரை நூறு பேரில் 33 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் பாதிப்புக்குள்ளானவா்களில் 32 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது பாதிப்பு பற்றி தெரிந்து வைத்துள்ளனர். மற்றவா்களுக்கு அதுகுறித்த விழிப்புணா்வு இல்லை. இதனால், அவா்கள் மருத்துவப் பரிசோதனைகளையோ சிகிச்சைகளையோ எடுத்துக்கொள்வதில்லை.
"எனவே பேராபத்தைத் தடுக்க 30 வயதுக்கு மேற்பட்டோா் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்," என்றார்.

