கோவை: பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வீதியில் நடந்து சென்ற மாணவி மீது 'கேக்' தடவி அடாவடியில் ஈடுபட்ட நான்கு பேரை கோவை காவல்துறை கைது செய்தது.
அந்நால்வரும் அம்மாணவியை அடித்து உதைத்ததாகவும் புகார் பதிவாகி உள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அந்த 15 வயது மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு, ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் அம்மாணவி.
அப்போது நான்கு பேர் சாலையின் நடுவே 'கேக்' வைத்து, அதை வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நான்கு பேரும் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் 'கேக்'கை தடவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவி, தன்னிடம் அத்துமீறியவர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நால்வரும் மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், 16 வயதுச் சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

